அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை – கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட ஊழியர்கள்
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/03/Untitled-design-2023-03-29T085921.465-780x470.png)
இலங்கையில் இன்று முதல் கடமைக்கு சமூகமளிக்காத எரிபொருள் நிலைய பணியாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிறுவனங்கள் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்த தொழிற்சங்க தலைவர்கள் உட்பட அனைத்து பெட்ரோலிய கூட்டுத்தான ஊழியர்களும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கையில் நேற்று பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமையினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்தது. எனினும் இராணுவத்தினரின் விசேட பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது மற்றும் விநியோகம் தொடரும் என அவர் நேற்று இரவு அறிவித்துள்ளார்.