இலங்கை

பிரபல யாழ் தீவக கிருஸ்தவ பாடசாலையில் பல மில்லியன் மோசடி ; அதிபர் மறைத்ததால் வெடித்த சர்ச்சை!

யாழ் தீவக கல்வி வலயத்தின் பிரபல ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இக்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டு 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களிடமிருந்து பல மில்லியன் ரூபா நிதியினை அதிபர் தனிநபர் வங்கிக் கணக்கின் ஊடாக மேற்கொண்டுள்ளார் . இது தொடர்பாக ஆண்டுவிழா வாசிப்பின்போது கணக்கறிக்கை முறைகேடுகள் தொடர்பாக பெற்றோரால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், குறித்த பாடசாலை அதிபர் நிதி விடயம் தொடர்பில் உரிய பதில் வழங்கவில்லை.

இந்நிலையில் குறித்த முறைகேடு தொடர்பில் வட மாகாண ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் உரிய பதில் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தீவக வலயக் கல்வி அலுவலக தகவல் வழங்கும் அலுவலரிடம் பாடசாலையின் 150ஆவது ஆண்டுவிழா கணக்கறிக்கைகள் தொடர்பான தகவல்களை முறைப்பாட்டாளர் கோரி விண்ணப்பித்தார்.

இது குறித்து பதில் வழங்கிய தீவக கல்விவலய தகவல் வழங்கும் அலுவலர் தங்களால் கோரப்பட்ட ஆவணங்கள் தனிப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு பெயர்களினூடாக மேற்கொள்ளப்பட்டமையால் இது தொடர்பான தகவல்களை வழங்கமுடியாதுள்ளது என உறுதிப்படுத்தியது. பாடசாலை நிகழ்வுக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் சேகரித்த அதிபருக்கு எதிராக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது என பெற்றோர் தரப்பால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button