இலங்கை

இலங்கையில் மீண்டும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசை : நெருக்கடி நிலை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் தற்போதைய கட்டண அதிகரிப்பை பொறுத்துக் கொள்ளாவிட்டால், எரிபொருளுக்கும், எரிவாயுவுக்கும் மீண்டும் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டை அதில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மின் கட்டண அதிகரிப்பு தாங்க முடியாத சுமை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் இருக்கும் தொடர்புகள் மூலம் பாெருளாதார நெருக்கடியை போக்கிக்கொள்ள உதவிகளை பெற்று வருகிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்காக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் முடிந்தளவு பூரணப்படுத்தி இருக்கிறது.அதில் இடம்பெற்ற சில குறைபாடுகள் காரணமாக இரண்டாம் கட்ட உதவியை பெற்றுக்கொள்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அதற்கான இணக்கப்பாடு தற்போது ஏற்பட்டிருக்கிறது.

நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவி இலங்கைக்கு வழங்குவதற்கு நாணய நிதியத்தின் செயற்குழு சபை மட்டத்தில் இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக நாணய நிதியத்தின் பேச்சாளர் பீடர் புறூக் தெரிவித்திருக்கிறார். எனவே இந்த உதவிகள் கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலைமை படிப்படியாக சரி செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
நாடு வங்குராேத்து நிலைக்கு செல்ல ஜனாதிபதி காரணமில்லை. வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்பவே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார். அதனால் மக்கள் பொருளாதார நெருக்கடி நிலையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மின் கட்டணம் மற்றும் ஏனைய கட்டண அதிகரிப்புகள் தாங்க முடியாத சுமையாகும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இருந்தபோதும் குறுகிய காலத்துக்காவது இதனை பொறுத்துக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் மீண்டும் கடந்த வருடத்தில் இடம்பெற்றதைப்போல் எரிபொருள், எரிவாயு பெறுக்கொள்ள வரிசையில் இருக்கவேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டார்.

Back to top button