இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட உள்ள தொகை: கல்வி அமைச்சு நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்ட தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உணவிற்கான தொகையை அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் நிதியமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் எண்பத்தைந்து ரூபாவை நூற்றி பதினைந்து ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி உள்ளது.

அத்துடன், ஒரு வேளை உணவுக்கு நூற்றி பதினைந்து ரூபா வழங்கினால் போதும் எனவும், சந்தையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களின் விலைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அடுத்தவாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய விலையில் மதிய உணவை வழங்க முடியாது என உணவு விநியோகஸ்தர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை பத்து லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் பலனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button