இலங்கை

யாழில் இனி வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் வகுப்புக்கள் நடத்த தடை என அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் – 9 ற்குட்பட்ட மாணவர்களுக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தனியார் வகுப்புகளை இடம்பெறமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் 7 நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நேற்று வெள்ளிக்கிழமை (09) காலை 09 மணி தொடக்கம் 1 மணிவரை யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் சுகாதாரம், கல்வி, மதத் தலைவர்கள், பொலிஸார் தனியார் கல்வி நிலைய நிறுவனங்கள், பெற்றோார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

1. பெற்றோருக்கு முதலில் விழிப்புணர்வு கருத்தமர்வுகளை தனியார் கல்வி நிலையங்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு பிரதேச செயலக மட்டங்களில் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2. ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமை மாலையும் நிறுத்தப்பட வேண்டும்.

3. தனியார் கல்வி நிலையங்கள் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம் கட்டடங்கள் போன்றவற்றுக்கமைய அமைந்திருக்க வேண்டும். தனியார் கல்வி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனம், பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் கட்டாயமாகும்.

4. தனியார் கல்வி நிலையங்கள் 15 தொடக்கம் 30 நிமிடம் வரை ஆன்மிகம், சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களை போதிக்க வேண்டும். இந்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுதை அவதானித்து பிரதேசமட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் குழு உருவாக்கப்படவுள்ளது.

மேலும் இத் தீர்மானங்களை பின்பற்றாத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

Back to top button