பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிசார் சிறையிலிருந்து வெளியிட்டுள்ள செய்தி!

இளைஞர் ஒருவரை பிரான்சில் பொலிசார் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பொலிசார் சிறையிலிருந்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், விதிகளை மீறியதாக ஒரு காரை பொலிசார் நிறுத்தச் சொல்லியதாகவும், அந்தக் காரின் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பொலிசார் அந்தக் காரை ஓட்டிய சாரதியை சுட்டுக்கொன்றுள்ளனர்.

குறித்த சாரதியின் பெயர் Nahel (17), அவர் அல்ஜீரியா மற்றும் மொராக்கோ பின்னணிகொண்டவர் என தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த கலவரம் தொடர்பாக பாரீஸில் 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், 40,000 பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் Nahel ஐ சுட்டுக்கொன்ற பொலிசார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதுடன், அவர் சார்பாக அவரது சட்டத்தரணியான Laurent-Franck Liénard தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். Nahelஐ சுட்டுக்கொன்ற பொலிசார், Nahelஇன் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தான் மக்களைக் கொல்லவேண்டுமென்ற நோக்கத்துடன் காலையில் கண் விழிப்பதில்லை என்று கூறியுள்ள அந்த பொலிசார், அந்த இளைஞனின் உயிரிழப்பால் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்துக்குப் பின் அவர் முதலில் வாய் திறந்து பேசிய வார்த்தையே என்னை மன்னித்துவிடுங்கள் என்பதுதான் என்று கூறியுள்ள Liénard, பின்னர் அவர் கடைசியாக தன்னிடம் கூறிய வார்த்தைகளும், அந்த குடும்பத்திடம் தான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக சொல்லுங்கள் என்பதுதான் என்றும் கூறியுள்ளார். கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அந்த பொலிசார், அந்த இளைஞர் கொல்லப்படும் வீடியோவைப் பார்த்தபோது, அதிலுள்ள வன்முறையைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் Liénard.

Back to top button