ஏனையவை

தமிழக அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட 6 மணி நேரம் தொடர் விசாரணை!

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் திங்கட்கிழமை அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் பொன்முடி-க்கு சொந்தமான வீடுகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் ஆகியவற்றில் இருந்து பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர்.

மேலும், விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி-யை அமலாக்கத்துறையினர் தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாலை 3 மணி வரை விசாரணை செய்தனர். இதையடுத்து மாலை 4 மணிக்கு மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியும் அவரது மகன் கவுதமசிகாமணியும் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இருவரும் நேற்று மாலை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவரோடு ஆஜரானார்கள். 6 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணை இந்நிலையில் அமைச்சர் பொன்முடி-யிடம் 6 மணி நேரம் விடாமல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அமைச்சர் பொன்முடி-யிடம் செம்மண் குவாரிகள் குறித்த பல கேள்விகளை அமலாக்கத்துறையினர் கேட்டுள்ளனர். மேலும் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை குறித்து ஆம்/இல்லை என பதிலளிக்கும் வகையில் 100 கேள்விகளை அமைச்சர் பொன்முடி-யிடம் அமலாக்கத்துறையினர் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவரது மகன் கவுதமசிகாமணியிடம், அரபு நாடுகள் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு குறித்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக இந்தோனேஷியாவில் 41 லட்சத்துக்கு வாங்கிய சொத்தை பல கோடிகளுக்கு விற்பனை செய்தது குறித்து அமலாக்கத்துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் பொன்முடி-யும் அவரது மகன் கவுதமசிகாமணியும் இரவு 10 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீண்டும் ஆஜராவது குறித்து எத்தகைய சம்மனும் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து, 95 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், அவரது வங்கி கணக்கில் இருந்து 41.9 கோடி ரூபாய் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Back to top button