இலங்கை

மத போதனைகளைக் கேட்டு மூட நம்பிக்கைகளிலிருந்து மீள முடியாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

மத போதனைகளில் பங்கேற்று மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் சந்திக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பிலான மத போதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போதனைகளை கேட்ட சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் காலி கராபிட்டிய வைத்தியசாலையின் மனநல நிபுணத்துவ மருத்துவர் ரூமி ரூபன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மூட நம்பிக்கைகளில் உழலும் நபர் அல்லது குழுவொன்று கூட்டாக இணைந்து உயிரை மாய்த்துக் கொள்வதனால் சொர்க்கத்திற்கு செல்ல முடியும் அல்லது கடவுளிடம் செல்ல முடியும் என பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மத கும்பல்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான மூட நம்பிக்கை பிரச்சாரங்கள் எவ்வளவு கவர்ச்சியான முறையில் மேற்கொள்ளப்பட்டாலும் ஏற்படக்கூடிய அழிவுகள் குறித்து தர்க்க ரீதியாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார். கூட்டாக உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பில் பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வைத்தியர் ரூபன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான மத நம்பிக்கைகளை உடையவர்கள் மனநல மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button