பிரான்ஸ்

பிரான்சில் வரலாறு காணாத அளவில் கொட்டித்தீர்த்த மழையால் அவசர நிலை பிரகடனம்!

பிரான்சில் வரலாறு காணாத அளவில் மழை கொட்டித் தீர்த்ததைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பிரான்சில், பெருவெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளன, பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

வரலாறு காணாத அளவில் பெய்த மழையினால் ஆறுகளின் கரைகள் உடைந்துள்ளதால், நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களில் அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் கட்டாயம் உருவாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், அடுத்த 24 மணி நேரத்தில், கிழக்கு பிரான்சில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் கூறியுள்ளது.

வடக்கு பிரான்சில் உள்ள Pas-de-Calais பகுதிக்கு விடுகப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை, புதன்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அப்பகுதியில் உள்ள சுமார் 50 சாலைகள் சேதமடைந்துவிட்டன. கிழக்கு பிரான்சில் உள்ள Alps of Haute-Savoieபகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்த நிலையில், Arve நதியைச் சுற்றி வசிப்பவர்கள் குறைந்தபட்சம் புதன்கிழமை நள்ளிரவு வரை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். சுமார் 300 வீடுகள் மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளன. நிலச்சரிவுகள், பாறைகள் சரிந்து விழுந்தது போன்ற விடயங்களால் ஏராளமான சாலைகள் மூடப்பட்டன. Rhône ஆற்றின் சில பகுதிகள் சுமார் ஒரு மீட்டர் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

Back to top button