இலங்கை

இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதி அறிவிப்பு

கால வரையறையின்றி பிற்போடப்பட்டிருந்த, இசைஞானி இளையராஜாவின் கொழும்பு இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20, மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் இந்த புதிய திகதிகளை தீர்மானித்து அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்காக முற்பதிவு செய்யப்பட்ட அதே அனுமதி சீட்டுகளை ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆகிய மாற்றுத்திகதிகளில் பயன்படுத்தலாம் எனவும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமையன்றும், ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்றும் இசை நிகழ்ச்சியை கேட்டும் பார்த்தும் மகிழலாம் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, மேற்கூறிய தினங்களில் நடைபெறவிருந்த இசைநிகழ்ச்சி காலவரையறையின்றி பிற்போடப்பட்டு, இன்று ஏட்பாட்டுக்குழுவினரால் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், இளையராஜாவின் மகள் பவதாரணியின் மறைவின் காரணமாக இசைநிகழ்ச்சி பிற்போடப்பட்டதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன், யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த பவதாரணியின் மரணத்தினால் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் இலங்கையின் இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயமாக ஏற்பாட்டுக்குழுவின் தற்போதைய அறிவிப்பு மாறியுள்ளது. மேலும், இலங்கை இசை ரசிகர்களுக்கு இசைஞானி இளையராஜா வழங்கிய உறுதியை நிறைவேற்றும் முகமாக குறித்த அறிவிப்பு மாற்றம்பெற்றுள்ளது.

Back to top button