இலங்கை

மீண்டும் கொழும்பில் சிறுநீரக மோசடி குறித்து சர்ச்சை! விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வறிய குடும்பங்களை இலக்கு வைத்து இடம்பெறும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் வசிக்கும் நால்வர் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய முறையான விசாரணைகளை மேலும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நாட்டில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் இந்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணையில் தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் மூன்று ஊழியர்கள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இந்நிலையில், குறித்த வைத்தியசாலையில் மீண்டும் அது தொடர்பான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button