ஏனையவை

வங்காள விரிகுடாவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை ஞாயிற்றுக்கிழமை (26) முதல் எதிர்வரும் 03ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மிகவும் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில், நாளை ஞாயிற்றுக்கிழமை வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. அது எதிர்வரும் 29ஆம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.

இப்போதைய, மாதிரிகளின் கணிப்பின் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களூடாகவே நகரும் வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் இது உருவாகும் காலப்பகுதியில் நிலவும் வளிமண்டல வெப்பநிலை, சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை, காற்றழுத்த தாழ்வு நிலையின் அமுக்க சாய்வுத் தன்மை மற்றும் தாழ்வு நிலைக்கு கிடைக்கும் மறைவெப்ப சக்தி என்பவற்றை பொறுத்து நகரும் திசை மாற்றமடையலாம். மேலும் மேற்குறிப்பிட்ட காரணிகள் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து புயலாக வலுப்பெறுமா என்பதனையும் தீர்மானிக்கும் என தெரிவித்தார்.

Back to top button