இலங்கை

தபால் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு வெளியாகவுள்ள வர்த்தமானி

நாட்டில் அத்தியாவசிய சேவையாக தபால் சேவைகளை பிரகடனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இன்று(08) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நேற்று(7) நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளது. தபால் ஊழியர்களின் போராட்டம் காரணமாக இன்று நாடு முழுவதும் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தபால் ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள தபால் திணைக்களம், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நேற்று இரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையிலேயே தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிடவுள்ளார்.

Back to top button