இலங்கை

மீண்டும் புதிய கட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற திட்டமிடும் கோட்டாபய ராஜபக்ச

கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது சகாவும், ஊடக உரிமையாளருமான ஒருவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சி மூலம் பாதிக்கப்பட்ட தனது பெயரை மீண்டும் கட்டியெழுப்பி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பில் அவரது சகா நேற்று அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களால் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டபோதிலும் முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கின்றார் என தெரியவந்துள்ளது. கட்சியை அவரது நெருங்கிய சகா டிலீத் ஜெயவீர சமீபத்தில் வாங்கியிருந்ததாவும் தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியின் புதிய தலைவராக ஜெயவீர பொறுப்பேற்ற பின்னர் கட்சியின் யாப்பில் மாற்றங்கள் சேர்க்கப்பட்டு புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. கட்சி தற்போது புதிய உறுப்பினர்களை இணைத்துவருகின்றதாகவும் ராஜபக்சவின் வியதமக போன்று கல்விகற்றவர்களை சேர்ப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஒக்டோபர் மாதம் ஊடகதுறையினர் மற்றும் வர்த்தக துறையினர் கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதியின் மதிப்பினை உயர்த்தும் விதத்தில் உரையாடியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியிலேயே தற்போதை முயற்சிகள் இடம்பெறுகின்றதாகவும் தெரிய வந்துள்ளது. ராஜபக்ச தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் அதற்கு அவரது குடும்பத்தினர் உட்பட நெருக்கமானவர்களே காரணம் என இந்த குழுவினர் கிராமத்தவர்களிற்கு தெரிவித்துள்ளனர்.

கோட்டபாய ராஜபக்ச குறித்த மக்கள் கருத்தினை அறிவதற்காக கருத்துக்கணிப்புகளையும் மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கோட்டாபய மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளனரா என்பதை அறிவதற்காக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகிவரும் நிலையில் ஜெயவீர தலைமையிலான புதிய கட்சிக்கு கோட்டாபய தனது ஆதரவை வழங்குவார் என தெரியவருகின்றது.

Back to top button