இலங்கை

யாழில் ஆபத்தான நிலைமையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து

அண்மைக் காலமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது இலாப நோக்கம் கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொள்கின்றன. இதனால், பல விபத்துக்கள் இடம்பெற்று பல உயிர்களும் பலியாகி இருக்கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னரும் தனியார் பேருந்தின் மிதி பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக விழுந்த நிலையில் பேருந்தின் சில் அவருக்கு மேலே ஏறி உயிரிழந்துள்ளார். இது இவ்வாறு இருக்கையில் பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.

அதேநேரம், யாழ் – காரைநகர் இடையேயான அரச பேருந்து ஒன்று, பாதுகாப்பற்ற விதத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியவாறு பயணித்த காணொளி வெளியாகி உள்ளது. குறித்த பேருந்தில் பயணித்தவர்களில் மாணவர்களும் மிதி பலகையில் நின்றவாறு பயணித்துள்ளனர்.

இதன்போது, பேருந்தானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு அருகில் செல்லும் போது, பயணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதுண்டு இறங்குவதை அவதானிக்க முடிந்தது. உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரும் பொறுப்பற்ற விதத்தில் அவர்கள் செயற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இப்படி பயணிக்கும் தனியார் பேருந்துகள் மீது தனியார் போக்குவரத்து சங்கமோ, அரச பேருந்துகள் மீது அரச போக்குவரத்து சங்கமோ அல்லது அதிகாரிகளோ நடவடிக்கை எடுப்பதில்லையா என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுகின்றது.

இந்நிலையில், அண்மை காலமாக பேருந்தில் பயணிக்கும் மக்கள் தமது உயிர்களை கையில் பிடித்தவாறே பயணிக்கின்றனர் என்பது பல சந்தர்ப்பங்களிலும் உறுதியாகி உள்ளது.

மேலும் யாழில், இடம்பெற்ற மோட்டார்சைக்கில் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த குறித்த பயணியின் சேலை மோட்டார் சைக்கிள் சில்லில் சிக்குண்டதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது இன்று காலை யாழ். அராலி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button