துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு என்ற கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அவருக்கு எதிரான தண்டனையை நடைமுறைப்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஆராய்ந்த பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன்படி, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் முன்னாள் ஜனாதிபதி முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.