இந்தியாஇலங்கை

ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்- அன்புமணி கோரிக்கை!

இலங்கை அரசுக்கு பொருளாதார ரீதியில் வழங்கிவரும் பல்வேறு உதவிகளை வழங்கிவரும் இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்,இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இலங்கைப்போரின்போது ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு, அதற்காக இன்று வரை வருந்தவில்லை.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை கடந்த காலங்களில் எதிர்கொண்டு வந்த போதும் கூட, தமிழர்களுக்கு எதிரான இனவெறியை கைவிடவில்லை.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் தொடர்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் 2022 பிப்ரவரி மாதம் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இருப்பதாக அந்த அறிக்கை கூறியது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களும், கொடுமைகளும் இன்னும் தொடர்கின்றன. தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்வதும் தொடர் கதையாகி விட்டது.

இனவெறி கோட்பாட்டை ஒழிக்காதவரை இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் இனவெறி வன்முறைகளுக்கு முடிவு கட்டாமல், பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு ஏற்படாது. எனவே,

இலங்கைக்கு நிபந்தனை இல்லாமல் இந்திய அரசு கடன் வழங்கவோ, ஆதரவளிப்பதோ கூடவே கூடாது. வடக்கு கிழக்கிலிருந்து ராணுவத்தை குறைத்தல், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், தமிழர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுதல், மீனவர் சிக்கலுக்குத் தீர்வு உள்ளிட்டவை தொடர்பாக இலங்கையிடம் வாக்குறுதிகளைப் பெற்று அதனடிப்படையில் மட்டும் தான் இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும்.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்திக்க உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக வலியுறுத்தி போதுமான உத்தரவாதங்களை பெற வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

Back to top button