இலங்கை

இலங்கையில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்

இலங்கையில், தற்போதைய நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு முடிவடைந்து புதிய அமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இம்மாதம் 13ஆம் திகதி நிறைவடையும், அதன் பின்னர் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஆரம்பமாகும் நாடாளுமன்ற வாரத்தில் பல அவசரகால ஆணைகளை நிறைவேற்றவும் அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன் பின்னர், ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் கூட்டத்தொடர் முடிவதற்கான வர்த்தமானியை வெளியிடுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாகவும், மார்ச் நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Back to top button