ஆன்மிகம்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை

இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.
2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

மனிதராக பிறந்தவர் ஒவ்வொருவர் வாழ்விலும் கஷ்டம், சோதனைகள் என்பது நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டு விடும்போது 2ம் எண் காரர்கள் மட்டும் வாழ்க்கையில் ஏற்படும் எப்பேர்பட்ட சோதனைகளையும் சவாலாக கொண்டு வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள். அம்பாளின் அருள் பெற்ற எண் 2ம் எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்களிடம் பெண்மையும், மென்மையும் கலந்து இருக்கும். இவர்கள் ஓரளவு தடித்த தேகம் கொண்டவர்காளாக இருப்பார்கள்.

மனிதனின் முக்கிய குணங்களான பாவனை, கற்பனை வளம், சந்தேக குணம், முரட்டு குணம், ஆராயும் தன்மை போன்றவை இவர்களிடம் இவர்களிடம் சற்று அதிகமாகவே காணப்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் இவர்களிடம் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு எப்போதும் புது புது சிந்தனைகளும், வித்தியாசமான யோசனைகளும் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கும்.

எந்த ஒரு காரியத்தையும் பதட்டத்துடனும், ஒருவித சோம்பலுடனும் அணுகும் குணத்தினையும் மாற்றிக் கொண்டால் இவர்கள் நிச்சயம் வாழ்வில் முன்னேறுவார்கள். முக்கிய காரியங்கள் எவற்றையும் சட்டென முடிக்காமல் காலத்தைக் கழித்து விட்டு, பின்பு அவசரம் அவசரமாகச் செய்து முடிபார்கள். இவர்களின் மனது ஆடம்பரத்தின் மீதும், அற்ப ஆசைகளின் மீதும் கவரப்படும். இவர்கள் அவ்வளவு எளிதில் யாரையும் நம்ப மாட்டார்கள். எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதை தான் செய்தால் மட்டுமே திருப்தி அடைவார்கள்.

இவர்களின் மனம் எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றி கொண்டே இருப்பார்கள். ஒரு செயலில் செயல்படும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அக்காரியத்தில் இறங்குவார்கள். சிறு துன்பம் வந்தாலும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்து கொண்டு அதை பெரிதுப்படுத்தி கொள்ளக்கூடியவர்கள். இவர்கள் வாழ்க்கையில் தெய்வ நம்பிக்கையையும், மனவலிமையையும் முறையாக பயன்படுத்தினால் பெரிய செல்வ சீமான்கள் ஆவார்கள்.

இவர்களின் குறிக்கோள் தங்களின் எதிர்கால நலன்கள் மற்றும் தங்கள் குடும்பம் சார்ந்த முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டவையாக இருக்கும். இளகிய மனதை கொண்டவர்கள். அதனால் சூழ்நிலைக்கேற்ப குறிக்கோள்களையும் மாற்றி அமைத்து கொள்ளக்கூடியவர்கள்.
உடல் அமைப்பு

இவர்கள் நல்ல உயரமானவர்களாக இருப்பார்கள். சந்திரனின் வலிமை குறைந்தால், நடுத்தர உயரமாக அல்லது குள்ளமாக இருப்பார்கள். உருண்டையான முகமும், அகன்ற கண்களும், கனத்த இமைகளும் உண்டு. பற்கள் சீராக இருக்காது. இளம் வயதிலேயே தொந்தி ஏற்படும் வாய்புகள் உண்டு.
குடும்ப வாழ்க்கை

இந்த எண்காரர்களுக்குக் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சிறு பிரச்சினைகளை கூடப் பெரிதுபடுத்திக் கொண்டு, மனைவிடம் சண்டை போடுவார்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். இவர்கள் தங்களது குடும்பத்தில் உள்ள மனைவி, குழந்தைகளை நம்ப வேண்டும். அவர்களுடன் ஒத்துழைத்து, அவர்களிடம் பாசத்தை காட்டினால், நல்ல இன்பமான வாழக்கை வாழலாம்.

பிறந்த தேதி பலன்
நண்பர்கள்

இவர்களுக்கு நல்ல நண்பர்கள் அமைவது மிகவும் கடினம். இவர்கள் பெரும் உதவிகள் செய்தாலும் நண்பர்கள் அதை நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.

இவர்களுக்கு 1, 3, 4, 7, 8 எண்களில் பிறந்தவர்கள் பல வழிகளில் உதவி புரிபவர்களாக இருப்பார்கள். இதில் மிகவும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவர்கள் வசியமாகி விடுவார்கள்.

குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே இவர்களுக்கு விசுவாசமுள்ள நண்பர்களாக இருப்பார்கள். இவர்கள் தன் நண்பர்களை நம்புவதை காட்டிலும், தன்னுடைய தன்னம்பிக்கையை நம்புவதன் மூலம் பல வெற்றிகளை பெறலாம்.
திருமண வாழ்க்கை

திருமண வாழ்வில் அதிர்ஷ்டம் இருந்தாலும், தங்களுக்கு அதிர்ஷ்ட எண்களில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால்தான் இவர்களது வாழக்கை வளமாக இருக்கும். இல்லையெனில் குடும்பப் பிரச்சினைகள் கடைசிவரை இருந்துகொண்டே இருக்கும். குடும்ப வாழ்வில் பல குழப்பங்களும், திருப்பு முனைகளும் உருவாகி கொண்டே இருக்கும். திருமணமான புதிதில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வீண் விவாதங்கள், வாக்குவாதங்கள் ஏற்படும்.

இந்த எண்ணில் பிறந்த பெண்கள் குற்றம் கண்டுபிடிப்பதில் கண்ணாக இருப்பார்கள். கணவன்-மனைவிக்கிடையே சண்டைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களுக்கு பெரும்பாலும் காதல் கைகூடும்.

தொழில்

இவர்கள் கற்பனை சக்தி அதிகம் கொண்டவர்களாதலால் சினிமா, நாடகம், நாட்டியம், காவியம், ஓவியம், சங்கீதம் போன்ற எல்லா துறைகளிலும் பிரகாசிப்பார்கள். கவிஞர்கள், கதாசிரியர்கள், புகழ்பெற்ற நடிகர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் பலரும் இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஆவார்கள்.
இவர்களுக்கு நீரின் தன்மை கொண்ட தொழில் சிறப்பை தரும். உதாரணமாக டீ, காபி போன்ற தொழில்கள், பால் பண்ணை, குளிர்பான தொழில்கள், கெமிக்கல் பெயிண்ட் போன்ற தொழில்களும் சிறப்பை தரும்.

பெண்கள் விரும்பும் துணிமணிகள், பொட்டு, பாசி, பூ, சென்ட் போன்ற அழகு சாதனப் பொருட்களை தயாரித்தல் மற்றும் விற்றல். மருந்துக்கடைகள், தைலங்கள், மருந்து பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களால் இவர்களுக்கு அதிக அளவில் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட தினங்கள்

ஒவ்வொரு மாதமும் 7, 16, 25 ஆகிய தேதிகளும், எண் 7 வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவை. 2, 11, 20, 29 தேதிகளிலும் நடுத்தரமான நன்மையே நடக்கும். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் சாதமான பலன்கள் நடைபெறும். 8 மற்றும் 9 எண்கள் இவர்களுக்கு கெடுதல் செய்பவையே. ஒவ்வொரு மாதத்திலும் 8, 9, 18, 26, 17, 27 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை. புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியம் – நோய்

இவர்களுக்கு வயிறு, ஜீரண உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் அடிக்கடி ஏற்படும். நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் சிறுவயதில் இருந்தே இருக்கும். சிறுநீரக கோளாறுகள் ஏற்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவை உண்டாகும். குடல் புண், இரைப்பை புண் மற்றும் பித்தம் அதிகரித்து நோய்கள் உண்டாகும். இவர்களுக்கு அடிக்கடி கண்ணில் நீர் வடியும். சிறுநீர் கழித்தலில் தொந்தரவுகள் உண்டாகும். தலையில் நீர் கோர்த்து அடிக்கடி தலைவலி ஏற்படும். இவர்கள் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

இவர்கள் தினமும் கீரை மற்றும் பழ வகைகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. உணவில் இரும்புச்சத்து அதிகமுள்ள, கருப்பு நிறமுள்ள உணவுகளை உண்ணுதல் சிறப்பு. அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, புதினா போன்றவற்றை நம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் நலத்தை காக்கலாம்.
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்

வெள்ளியுடன் தங்கத்தையும் சேர்த்துக் அணிந்து கொண்டால் நல்ல பலன்கள் ஏற்படும். முத்து, சந்திர காந்தக்கல், வைடூர்யம் ஆகியவை அணிந்தால் அதிர்ஷ்ட பலன்களை அடையலாம். பச்சை இரத்தினக்கல், ஜேட் என்னும் கற்களையும் அணியலாம். நல்ல பலன்களைக் கொடுக்கும்.


அதிர்ஷ்ட நிறங்கள்

  1. பச்சை கலந்த வர்ணங்களும், லேசான பச்சை, மஞ்சள், வெண்மை நிறங்களும் அதிர்ஷ்டகரமானவை.
  2. கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
    தேதி வாரியாக பொதுவான பலன்கள்
    2-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் உயர்ந்த இலட்சியம் கொண்டவர்கள். கற்பனா சக்தியும் அதிகம் உடையவர்கள். சாந்தமும் குணமும், அமைதியான சுபாவமும் கொண்டவர்கள். பேச்சு வார்த்தைகள் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் போன்ற பெரும்பாலானோர் இந்த தேதியில் பிறந்தவர்களாவர்கள்.
11-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் உடையவர்கள். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள். பொது நலத்திற்காகத் தங்களது அறிவைப் பயன்படுத்துவார்கள். இதனால் பல சோதனைகளும் உண்டாகும். தேவைக்கு ஏற்ற பொருளாதாரம் நிச்சயம் உண்டு. நிம்மதியான வாழக்கை உண்டு. தங்களது திறமைகளைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால், பொருளாதார நிலையில் நிச்சயம் மேன்மையான நிலையை அடையலாம்.
20-ம் தேதி பிறந்தவர்கள்

மற்ற மக்களுக்காக உரிமையுடன போராடுவார்கள் இவர்களே, ஆனாலும், பேராசை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு சுயநலம் அதிகம் உண்டு. சுயநலத்தை விட்டுவிட்டால், பெரும் புகழும், செல்வமும் வந்து சேரும். பலருக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். கற்பனை வளம் நிறைந்தவர்கள். தங்களது உணர்ச்சிகரமான பேச்சினால், மக்களை வசியம் செய்யும் ஆற்றல் கொண்டவர்கள். தன்னம்பிக்கை அதிகம் உண்டு.
29-ம் தேதி பிறந்தவர்கள்

2ம் எண்ணின் ஆதிக்கம் மிகவும் குறைந்த எண் இது. இதனால் இவர்கள் போராடும் மனோபலம் உடையவர்கள். பிரச்சினைகள் ஏற்பட்டால் வாய்ச் சமர்த்தினாலும், தேவைப்பட்டால் வன்முறையில் கூட இறங்கிச் சமாளிக்கத் தயங்க மாட்டார்கள். திருமண வாழக்கை பல பிரச்சினைகள் உடையதாக இருக்கும். பஞ்சாயத்து வரை சென்று, குடும்பப் பிரச்சினைகள் தீரும். 29ந் தேதியில் பிறந்த நல்லவர்களால், பல அரிய சாதனைகளும் உலகில் நிகழ்ந்துள்ளன. தங்களுடைய வாழ்க்கைப் பாதையைச் சரியான பாதையில், அமைத்து கொண்டால் இவர்கள் மனிதர்களுள் மாணிக்கமாவார்கள். எதிரி மிஞ்சினால் கெஞ்சுவதும், கெஞ்சினால் மிஞ்சுவதும் இவர்களின் சுபாவமாகும்.

Back to top button