இலங்கை

எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! – நெகிழ்ச்சியை ஏற்பத்திய தமிழர்

கடந்த மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் நினைவேந்தலை, எவரெஸ்ட் சிகரத்தில் நபரொருவர் அனுஷ்டித்துள்ளார். இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் விவேகானந்தன் துஷியந்தன் என்ற 46 வயதான நபர் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை இவ்வாறு எவரெஸ்ட் சிகரத்தில் அனுஷ்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறும்போது, நான் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து மலையில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றேன். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் நினைவேந்தலை எவரெஸ்ட் மலை சிகரத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதுக்குள் இருந்தாலும், அதனை சாத்தியப்படுத்த கடந்த காலங்களில் நான் கடுமையாக பாடுபட்டடேன். இதற்காக நான் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி எவரெஸ்ட் மலையின் சிகரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தேன்.

மேலும், என்னுடன் 5 பேர் கொண்ட குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தனர். கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் தினமான அன்று நாம் 8849 மீற்றர் உயரமான எவரெஸ்டின் சிகரத்தை அடைந்து அங்கு நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தேன். ஆரம்பகால மலையேறும் பயிற்சியை ஜோன்குப்த வழங்கிய போதிலும், எவரெஸ்ட் மலையில் ஏறும்போது இவரது பயிற்சியாளராக யான்தப்பா வழங்கினார். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கை தமிழனும், இலங்கையைச் சேர்ந்த ஆணும் தானே எனக் கூறும் துஷியந்தன், இதற்கு முன்னர் மலேசிய தமிழர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளதாக கூறுகிறார். தனது இனத்தின் மீதான பற்றும், நாட்டின் மீதான பற்றுமே என்னை சிகரம் தொடுமளவு சாதிக்க வைத்தது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நாம் சாதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரையடுத்து விவேகானந்தன் துஷியந்தன், 13 வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளார். தற்போது திருமணம் முடித்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு 3 பெண்பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவர் ஒரு விளையாட்டு வீரருமாவார். மரதன், சைக்கிளோட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் இவர் மலையேறுவதை ஆரம்ப காலங்களில் பொழுதுபோக்காக கொண்டிருந்தார். இந்நிலையில், 2010ஆம் ஆண்டு மலேசியாவின் கொற்றுகினபாலோ, 2016இல் ஆபிரிக்காவின் கிளிமஞ்சாரோ, 2020இல் இங்கிலாந்தின் வேல்ஸ், 2022இல் நேபாளத்தில் ஐலன்பீக், லெபட்ரே, மனசிலு போன்ற மலைகளில் ஏறி பயிற்சி பெற்றுள்ளார்.

Back to top button