இலங்கை

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 18 லட்சம் ரூபாவை அறவிட திட்டமிட்டுள்ளதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய பணத்தை பெறாமல் உடனடியாக உறுதிப் பத்திரங்களை வழங்குமாறு கோரி மேல்மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் நேற்று மனுவொன்று கையளிக்கப்பட்டது. சங்கராஜ மாவத்தை அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அந்தந்த வீடுகளில் வசிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் மாதம் 140 ரூபா வீதம் 40 வருடங்களாக பணம் செலுத்தியும் இதுவரையில் இந்த வீடுகளுக்கான பத்திரங்களை வழங்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அரசாங்கம் 18 லட்சம் ரூபாவைக் கோருவதாகவும், பணம் அறவிடாமல் வீட்டுப் பத்திரங்கள் வழங்கப்படும் என அரசியல்வாதிகள் காலம் காலமாக வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாளிகாவத்தை, பள்ளியாவத்தை போன்ற பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூட மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தாம் வசிக்கும் காணிகள் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக சுவீகரிக்கப்படுவதனால், கொழும்பு மக்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குடியிருப்பு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Back to top button