இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் தொடரும் குளறுபடி குறித்து விசாரணை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் சில விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் ஆராய விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இன்று (02.10.2023) காலை 9.30 மணிக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பல ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் விமான சேவை நேர அட்டவணைகளில் தாமதங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விமான சேவைகளின் தாமதங்கள், நாட்டின் தேசிய விமான சேவைக்கு களங்கம் ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அண்மைய நாட்களில் சில விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது. அத்துடன் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கி வரும் அசௌகரியங்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Back to top button