இலங்கை

யாழிலிருந்து வடகிழக்கில் நிலைகொண்டுள்ள சக்திமிக்க தாழமுக்கம் :சூறாவளியாக வலுவடையும் !

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 330 கிலோ மீற்றர் தொலைவில் சக்திமிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளது. 

இது விருத்தியடைந்து அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடையக்கூடும். இது இலங்கையின் வட கரையை அண்மித்ததாக நாட்டை விட்டு அப்பால் நகர்ந்து செல்கின்றது. 

இது சூறாவளியாக மாறி வடக்கு நோக்கி நகர்வதுடன் நாளைமறுதினமளவில் தென் ஆந்திரா கரையை ஊடறுத்து செல்லக்கூடும் என சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும். 

இதேவேளை  இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும்  காணப்படும். 

ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

காலி தொடக்கம் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்பாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். 

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40- 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

Back to top button