இலங்கையர் படைத்த 8 வது உலக கின்னஸ் சாதனை!

22 கிலோ எடையுள்ள கொங்கிறீட் கட்டையை தனது கைகளில் தாங்கி ஒரு நிமிடத்தில் 26 கட்டைகளை உடைத்து ஹங்குரன்கெட்ட பல்லேபோவல பகுதியைச் சேர்ந்த ஜனக காஞ்சனா முதன்நாயக்க என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். குறித்த புதிய கின்னஸ் சாதனையானது நேற்றைய தினம் (29-08-2023) கண்டி, சஹாஸ் உயனேயில் மத்திய மாகாண பொலிஸ்மா அதிபர் மகிந்த திசாநாயக்கவின் மேற்பார்வையில் நிலைநாட்டப்பட்டது.

ஜனக காஞ்சனா இதற்கு முன்னர் 7 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார். இதேவேளை, 18 கின்னஸ் சாதனைகளைப் படைப்பதே அவரது இலக்காகும், அவர் இலங்கை துறைமுக அதிகாரசபையில் பணியாற்றுகிறார். 40 செ.மீ நீளம், 20 மி.மீ அகலம், 05 செ.மீ உயரம் கொண்ட கொங்கிரீட் கனசதுரம் ஒன்று கண்டி மாநகரசபையின் பொறியியற் பிரிவின் பூரண மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ளது.அதனையே ஜனக காஞ்சனா உடைத்து 8 வது கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் விமானம், கப்பல் மற்றும் புகையிரதத்தை இழுத்து மேலும் 10 கின்னஸ் சாதனைகளை படைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கின்னஸ் கமிட்டியிடம் இவரது சாதனையை சமர்ப்பித்த நிலையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்த்ததன் மூலம் இந்த சாதனை கின்னஸ் சாதனையாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்றது. இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, கின்னஸ் குழுவின் இலங்கை இணைப்பாளர் இந்திக்க ஜயலத், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அதுல ஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.