இலங்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் நிதி நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், 1.4 மில்லியன் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி முன்வைத்துள்ள இந்த சம்பள உயர்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதியின் பலமான கோரிக்கையை அடுத்து, அரசாங்கம் தனித்துவமான நாணய முகாமைத்துவம் தொடர்பாக செயற்பட்டு வருகின்றது.

இந்த சம்பள அதிகரிப்பின் ஒரு பகுதியை ஜனவரியிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வித்துறைக்கு பணம் ஒதுக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றுக்கு குறித்த உத்தரவின் கீழ் பணம் விடுவிக்கப்பட்டு, சுமார் 1.4 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த சம்பள உயர்வில் 5,000 ரூபா சம்பளமாக அல்லது கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ஆசிரியர்களின் சம்பளத்துக்கான பணம் ஏற்கெனவே திறைசேரிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Back to top button