இலங்கை

இலங்கை முழுவதும் ஜனவரியிலிருந்து கொண்டு வரப்படும் நடைமுறை! உடன் பதிவு செய்யுமாறு மக்களுக்கு அறிவிப்பு

இலங்கை முழுவதும் குறுந்தகவல் மற்றும் இ – பட்டியல் (E – Bill) மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர் பட்டியல் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த நடைமுறை கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறுஞ்செய்தி மற்றும் இ – பட்டியல் சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் தங்களை உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன் திருகோணமலை, கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு மற்றும் பொலன்னறுவை ஆகிய நான்கு பிரதேசங்களுக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து குறுந்தகவல் அல்லது ஈ – பட்டியல் மூலம் மாத்திரமே நீர் பட்டியலை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியாக இந்த நடைமுறை செயற்பாட்டிற்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் எந்தவொரு நுகர்வோரும் பதிவு செய்யப்பட்ட தமது கையடக்க தொலைபேசி எண்ணை மாற்றினால், அவசர 071 9399999 தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்றும் பியல் பத்மநாத் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button