கனடா

கனடாவை விட்டு சொந்த நாட்டுக்கே திரும்பிய ஒரு லட்சம் புலம்பெயர்ந்தோர்: சர்வதேச மாணவர்களுக்கும் சிக்கல்

கனடாவுக்குச் சென்று ஒரு சிறந்த வாழ்வை வாழலாம் என்ற ஆசையில் பெரும் தொகை செலவு செய்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஏராளமானோர், கனடாவில் நிலவும் விலைவாசியால் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பி வருகிறார்கள். 2022ஆம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்தோர் (93,818) கனடாவை விட்டு தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பியதாக சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

2023இல், முதல் ஆறு மாதங்களில் மட்டும், 42,000 புலம்பெயர்ந்தோர் கனடாவை விட்டு தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள்காட்டி, ராய்ச்சர்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி கஷ்டப்பட்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர், மீண்டும் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்வதற்குக் காரணம், கனடாவில் நிலவும் விலைவாசி.

குறிப்பாக, வாடகைக்கானாலும் சரி சொந்தமாக வாங்குவதானாலும் வீடுகளுக்காகவே மக்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை செலவிடவேண்டியுள்ளது. உதாரணமாக, ஹொங்ஹொங் நாட்டவரான காரா (25), மாதம் ஒன்றிற்கு, ஒரு படுக்கையறை குடியிருப்பு ஒன்றிற்கு, 650 டொலர்கள் வாடகை செலுத்துகிறார். அவரது வருவாயில், இது சுமார் 30 சதவிகிதம் ஆகும். மூன்று இடங்களில் பகுதி நேரப் பணி செய்துகொண்டே கல்வியும் கற்கும் காரா, தனது வருவாய் முழுவதையுமே செலவு செய்யவேண்டியதாகிவிடுகிறது, கொஞ்சம் கூட சேமிக்கமுடியவில்லை என்கிறார்.

இதுவே, தன் சொந்த நாடான ஹொங்ஹொங்கில், தனது வருவாயில் மூன்றில் ஒரு பங்கை தன்னால் சேமிக்க முடிந்தது என்கிறார் காரா. ஆக, இப்படி கனடாவில் சம்பாதித்த பணம் முழுவதையும் கனடாவிலேயே செலவு செய்துவிட்டு, மீதம் எதையும் சேமிக்கமுடியாத பட்சத்தில் கனடாவில் ஏன் வேலை பார்க்கவேண்டும், பேசாமல் சொந்த ஊருக்கே திரும்பிவிடுவோம் என்ற எண்ணம் ஏற்படுவது சகஜம்தானே?

சர்வதேச மாணவர்களுக்கும் சிக்கல்
இப்படி வேலைக்கு வந்தவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள் என்றால், படிக்க வந்தவர்கள் பாடும் இனி திண்டாட்டம்தான் போலுள்ளது. ஆம், கனடா 2024 ஜவனரி முதல் புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்கிறது. அதன்படி, சர்வதேச மாணவர்கள் இனி தங்கள் வங்கிக்கணக்கில் 20,635 டொலர்கள் வைத்திருக்கவேண்டும், தற்போது இந்த தொகை, 10,000 டொலர்களாக உள்ளது, ஜனவரியில் அது சுமார் இரண்டு மடங்கைவிட அதிகமாக உள்ளது. ஏற்கனவே இருக்கும் நிலத்தையும் வீட்டையும் விற்றோ, அடகு வைத்தோ பிள்ளைகளை கனடாவுக்கு கல்வி கற்க அனுப்பும் பெற்றோர், இந்த கூடுதல் செலவுகளை எப்படி எதிர்கொள்வார்கள்? ஆக மொத்தத்தில், கனடாவில் விலைவாசி விண்ணை எட்டுகிறது, புலம்பெயர்வோர் பாடு திண்டாட்டம்தான்!

Back to top button