இலங்கை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான அபின் போதைப்பொருள் அதிரடிப் பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் இன்று (08.01.2024) காலை மீட்கப்பட்டுள்ளது. 48 கிலோகிராம் நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபாய் எனவும், கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பில் யுக்திய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய குறித்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதற்தடவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் 84 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா திங்கட்கிழமை (08) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை – வல்லிபுரம் காட்டுப் பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்புச் சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Back to top button