விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் தந்தை-மகன் விக்கெட்டுகளை வீழ்த்திய அரிய சாதனை படைத்த அஸ்வின்!

தமிழக வீரர் அஸ்வின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைகளை படைத்துள்ளார். டொமினிக்கா மைதானத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில், மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களில் சுருண்டது. தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடக்க வீரர் தேஜ்நரைன் சந்தர்பாலின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றியபோது புதிய சாதனை ஒன்றை படைத்தார். அதாவது, முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பாலின் விக்கெட்டை 4 முறை அஸ்வின் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், அவரது மகனான தேஜ்நரைன் விக்கெட்டையும் வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தந்தை-மகன் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற அரிய சாதனையை அஸ்வின் படைத்தார். மேலும், உலகளவில் இந்த சாதனையை படைத்த 4வது வீரர் அஸ்வின் ஆவார். அத்துடன் 700 விக்கெட்டுகளை சர்வதேச கிரிக்கெட்டில் வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற சாதனை பட்டியலிலும் அஸ்வின் இணைந்தார். இந்தப் பட்டியலில் முன்னாள் வீரர்கள் அனில் கும்ப்ளே (953) முதலிடத்திலும், ஹர்பஜன் சிங் (707) 2வது இடத்திலும் உள்ளனர்.

Back to top button