இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் – 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாதமை மூலம், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

குறித்த தாக்குதல்கள் தொடர்பில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் பிரதிவாதிகளாக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button