கனடா

கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஆபத்தான பொருளால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!

கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த மாதம் 25 ஆம் திகதி சுங்க வருமான கண்காணிப்பு குழுவினர் நாட்டுக்கு வந்த கொள்கலன் ஒன்றினை சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கு 6 கிலோ குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொள்கலனில் மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருள் சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதி எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போதைப்பொருள் கனடாவில் இருந்து கணேமுல்ல பிரதேசத்திலுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த பொதியின் உரிமையாளர் சார்பாக வந்த முகவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை இதற்கு முதல் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் 35 கிலோ ஹாஷிஷும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் 10.5 கிலோ குஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கடந்த 3 மாதங்களில் 50 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹாஷிஷ் சட்டவிரோத போதைப்பொருள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Back to top button