இலங்கை

வெளிநாட்டில் இருந்து யாழில் கூலிப்படையை ஏவிவிட்ட பெரியம்மா; அரங்கேறிய பயங்கர சம்பவம்!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார் மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் 3 ரௌடிகளை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. இதன்போது ரூ.2 கோடி பெறுமதியான சொத்துக்கள் எரித்து அழிக்கப்பட்டன. கார் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் 3 பிரதான சந்தேகநபர்களை கைது செய்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு வாள் என்பன மீட்கப்பட்டன.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட் விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெரியம்மா பெல்ஜியத்தில் வாழ்ந்து வருவதும், அவருக்கு தெரிந்தவர் ஒருவரின் தேவைக்கு அமைய, கூலிப்படையாக யாழ்ப்பாண ரௌடிகள் செயற்பட்டது தெரிய வந்தது. கடைகளை எரிப்பதற்கு ரூ.12 இலட்சமும், வாகனங்களை எரிப்பதற்கு ரூ.7 இலட்சமும் வழங்கலாம் என பெல்ஜியம் நபர் ஒப்பந்தம் பேசியுள்ளார். முதற்கட்டமாக ரூ.1.5 இலட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபரின் வங்கிக் கணக்குக்கு இந்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றச்செயலில் சூத்திரதாரியான பெல்ஜயம் வாழ் நபரை, இன்டர்போலின் உதவியுடன் கைது செய்ய பொலிசார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

Back to top button