விளையாட்டு

இன்று இலங்கை மற்றும் இந்திய அணிக்கான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றியை கைப்பற்ற போகும் அணி எது?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 ஆவது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் கடந்த ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமானதுடன், தொடரின் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்றன.

அதன்படி இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் 8ஆவது தடவையாக மோதவுள்ளன. இதுவரையில் ஆசிய கிண்ணத்தை இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும் வென்றுள்ளன.

இதேவேளை இன்றைய போட்டியிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷன உபாதை காரணமாக விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சஹான் ஆரச்சிகே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அத்துடன் உபாதை காரணமாக இந்திய அணியின் அக்ஷர் பட்டேல் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இன்று விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய போட்டிக்கான அனுமதிச் சீட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் அனுமதிச் சீட்டு விற்பனைக்காக வித்யா மாவத்தை மற்றும் ஆர். பிரேமதாச மைதானத்திற்கு அருகில் திறக்கப்பட்ட விற்பனை கூடங்கள் மூடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், 100 க்கும் மேற்பட்ட மேல் தளம் மற்றும் விருந்தினர் அனுமதிச் சீட்டுகள் மட்டுமே விற்கப்படவுள்ளதாகவும் அவை விசேட விலையில் விற்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

Back to top button