இலங்கை

மீண்டும் இலங்கைக்கு அருகில் பயணிக்கவுள்ள காற்று சுழற்சி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இலங்கைக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 13, 14, அல்லது 15 ஆம் திகதியளவில் இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சில நாட்களுக்கு பெரும்பாலும் சீரான காலநிலையே நீடிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

Back to top button