இந்தியா

சந்திராயன் – 04 இன் அடுத்தகட்ட முயற்சி: இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

நிலவின் மண் மாதிரியை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வரும் இஸ்ரோ அதற்காக சந்திரயான்-4 விண்கலத்தை விரைவில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. சந்திரயான்-4, ஆய்வுகளுக்காக நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு விண்ணில் ஏவப்படவுள்ளது,

இது நிலவிற்கு சென்று மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்புவதற்கான தொழில்நுட்பங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலமும் சந்திரயான் -3 ஐப் போல தரையிறக்கப்பட்டு, சந்திராயன் -04 இன் மத்திய தொகுதி சந்திரனின் மண் மற்றும் பாறைகள் மாதிரி மற்றும் சுற்றுப்பாதை தொகுதியுடன் பூமிக்கு திரும்பும் என இஸ்ரோவின் இயக்குனர் நிலேஷ் தேசாய் அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இஸ்ரோ அண்மையில் சந்திரயான் -3 இன் உந்துவிசைத் தொகுதியை பூமியின் சுற்றுப்பாதைக்கு திரும்பச் செய்தது, இது சந்திரனில் இருந்து பூமிக்கு மாதிரிகளை எவ்வாறு கொண்டு வரலாம் என்பது குறித்த அனுபவத்தை அவர்களுக்கு வழங்கியதாகவும். அதனை அடிப்படையாகக் கொண்டு, சந்திரயான்-3 ஐ விட சந்திரயான்-4 ஐ மிகவும் மேம்பட்ட மற்றும் சிக்கலான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சந்திரயான்-4 திட்டம் இன்னும் சில வளர்ச்சி நிலைகளைக் கொண்டுள்ளதனால், அதன் சரியான வெளியீட்டுத் திகதியை அதிகாரிகளால் வெளியிடமுடியாமல் இருப்பதாகவும், இதன் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த தகவல்களை இஸ்ரோ விரைவில் வெளியிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Back to top button