இந்தியா

உதயநிதி மீது ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து இந்தியா முழுவதும் எதிர்ப்பை கிளப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி செப்டம்பர் 7 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், “சனாதனம் என்ன என்பதை, தன் வீட்டில் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களில் எடப்பாடி பழனிசாமி தேடிக் கொண்டிருக்கிறார். கோடநாடு கொலை கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளிலும் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது. அந்த ஆடே ஒருநாள் காணாமல் போகும் போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், “உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும் கூறியுள்ளார். தன்னை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ரூ.1.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Back to top button