இந்தியா

கர்நாடகாவில் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்! விழா அறையை கோமியத்தால் சுத்தப்படுத்திய மாணவர்கள்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டதால், அவர் சென்ற அறையை பாஜக அமைப்பு மாணவர்கள் பசு கோமியத்தை வைத்து சுத்தப்படுத்தினர். நடிகர் பிரகாஷ் ராஜ், பாஜகாவிற்கு எதிராகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார். கர்நாடகாவின் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் உள்ள சில முற்போக்கு சங்கங்கள் இணைந்து ‘திரையரங்கு சினிமா சமுதாயம்’ என்ற கருத்தரங்கு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில், நடிகர் பிரகாஷ் ராஜ், பேராசிரியர் சந்திர சேகரய்யா, சமூக ஆர்வலர் கே.எல்.அசோக் மற்றும் விவசாய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நடிகர் பிரகாஷ் ராஜ் விழாவில் கலந்து கொண்டதை அறிந்த பாஜக அமைப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு திரண்டனர். மேலும், கல்லூரியில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்தது யார் என்று கூறி பாஜக தொண்டர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போராட்டம் காரணமாக பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டதால், அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, கல்லூரியில் நடைபெற்ற விழா முடிந்து பிரகாஷ் ராஜ் உள்பட அனைவரும் சென்றுவிட்டனர். அப்போது, பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட அறையை பாஜக அமைப்பு மாணவர்கள் பசு கோமியத்தை வைத்து சுத்தப்படுத்தினர். இதனால் கல்லூரியில் பதற்றம் நிலவியது.

Back to top button