இந்தியா

நடிகர் விஜய் விஜயகாந்தை போல அரசியலுக்கு வர முடியாது! பிரேமலதா கருத்து

நடிகர் விஜய் விஜயகாந்தை போல அரசியலில் வர முடியாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வருகிறார். அந்தவகையில், கண் தான திட்டம், குருதி கொடை, குழந்தைகளுக்கு பால், ரொட்டி வழங்கும் திட்டம் போன்ற உதவிகளை செய்து வருகிறார். கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பொதுத் தேர்வில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜூன் 17ஆம் திகதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விழா நடைபெற்றது.

இந்நிலையில், சென்னை, நீலாங்கரையில் நடைபெற்ற விழாவில், நடிகர் விஜய் 1600 மாணவ, மாணவிகளுக்கு நின்று பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கினார். மேலும் விழாவில் பேசிய விஜய், மாணவர்களிடம் ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறுங்கள் என்ற பேச்சும் பேசுபொருளானது. இதனையடுத்து, ஜுலை 15ஆம் திகதி காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழைஎளிய மாணவர்கள் கல்வி பயில ‘தளபதி விஜய் பயிலகம்’ என்னும் இரவுநேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், அவரது செயல்பாடுகள் அரசியலுக்கு வர ஆயத்தமாகி கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது.

இதேவேளை, இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. அதனால் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. தமிழக முதலமைச்சரிடம் தான் மொபைல் மூலம் பேசியதாக வெளியான தகவல் தவறானது” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “விஜயகாந்தை போல அரசியலில் நடிகர் விஜய் வர முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அவர், விஜயகாந்தை போல வர முடியாது. அரசியல் வேறு, சினிமா வேறு. நடிகர் விஜய் மாணவர்களுக்கு உதவி செய்தது நல்ல விஷயம். அதுமட்டுமில்லாமல், அரசியலுக்கு வருகிறாரா, இல்லையா என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார்.

Back to top button