கறுப்பு சட்டையுடன் சட்ட சபைக்கு வந்த எடப்பாடி அணி!

சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
துணை தலைவர் இருக்கை விவகாரமே இதற்க்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் , துணைத்தலைவர் இருக்கை மட்டுமின்றி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள் பிரச்சினை உள்பட பல்வேறு செயல்களை கண்டித்தே கருப்பு சட்டை அணிந்ததாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை , சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்வு செய்து அது தொடர்பான கடிதமும் முறைப்படி சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இருக்கையை மாற்றுவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்னும் முடிவெடுக்கவில்லை.
இருக்கை விவகாரம் தொடர்பாக நேற்றும் அ.தி.மு.க.வினர் சபாநாயகரை சந்தித்து முறையிட்டனர்.
வழக்கம்போல இன்றும் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி அருகிலேயே அமர்ந்து இருந்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை. இறுகிய முகத்துடனேயே காணப்பட்டனர்.
ஆனால் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.