இந்தியா

தமிழரான சந்திரயான்-3 திட்ட இயக்குனரின் பெருந்தன்மையான செயலுக்கு குவியும் பாராட்டுகள்

தமிழகம் விழுப்புரத்தை சேர்ந்த சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், தனக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.25 இலட்சம் பரிசு தொகையை தான் பயின்ற நான்கு கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளார்.அவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.

குறித்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசும்போது, சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை பற்றிய செய்தி கொடிகட்டி பறப்பதாகவும், சந்திரயான்-3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இருந்தது பெருமையளிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திய 9 விஞ்ஞானிகளுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், தனக்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் பரிசு தொகையை தான் படித்த பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளார். அதன்படி தான் படித்த விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்திற்கு ரூ.25 லட்சத்தை வீரமுத்துவேல் பகிர்ந்து அளித்துள்ளார். இதையொட்டி விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Back to top button