இலங்கை

உயர் நீதிமன்றம் ராஜபக்சர்களின் பெயரை உள்ளடக்கி வெளியிட்ட பட்டியல் : நெருக்கடியில் இலங்கை மக்கள்

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச,மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ரால் உள்ளிட்டோர் மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர உள்ளிட்ட பலர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன், நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அரசாங்கம் செயற்படுகிறது
தொடர்ந்தும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. வரி கொள்கையால் ஒட்டுமொத்த மக்களும் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நடுத்தர மக்கள் தமது அன்றாட தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதை நாங்கள் தடுக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அரசாங்கம் செயற்படுகிறது. நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்குமாறு வரி விதிக்க நாணய நிதியம் குறிப்பிடவில்லை. ஊழல் மோசடியை இல்லாதொழித்து அரச வீண் செலவுகளை மட்டுப்படுத்துமாறு குறிப்பிட்டது. ஆனால் இந்த யோசனைகள் செயற்படுத்தப்படவில்லை. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு திங்கட்கிழமை (11) சேர்பெறுமதி (வற்) வரி சட்டமூல விவாதத்தில் எமக்கு உரையாட வாய்ப்பளிக்கவில்லை.

இந்நிலையில், வசதி படைத்தவர்களிடமிருந்து வரி அறவிடுவதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 904 பில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு தேசிய இறைவரித் திணைக்களம் முறையாக செயற்படவில்லை. நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வரி கொள்கையை தவிர்த்து நடைமுறையில் உள்ள வரி கொள்கை வலையமைப்பை சிறந்த முறையில் முறையாக செயற்படுத்தினால் தேசிய வரி வருமானத்தை முறையாக பெற்றுக்கொள்ளலாம்.
வரிகளை அதிகரித்தால் மாத்திரம் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்பதை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச,மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ரால் உள்ளிட்டோர் மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர உள்ளிட்ட பலர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேசியத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Back to top button