இந்தியா

தமிழகத்தில் வேகமாக பரவும் JN.1 வகை கொரோனா.., எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் JN.1 என்ற புதிய வகை கொரோனா குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ரூ 27.96 கோடி மதிப்பீட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து காசநோய் மூலக்கூறு கண்டறியும் கருவிகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”JN.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இந்த கொரோனாவிற்காக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த தேவை தமிழகத்திற்கு கிடையாது. JN.1 வகை கொரோனா பாதிப்புகள் குறித்து அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை.

அதே சமயம், மத்திய அரசு சில வழிக்காட்டுதல்களை அளித்துள்ளது. அதில், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை கண்காணிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த மாதிரியான தவறான செயல்களில் ஈடுபடுவர்கள் அவர்களாக பார்த்து திருந்த வேண்டும். தமிழகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மழையால் ஏற்படும் காய்ச்சல் எதுவும் இல்லை. கவலைப்படும் வகையில் பாதிப்புகள் எதுவும் இல்லை, மக்கள் தைரியமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Back to top button