இந்தியா

நாளை வங்கக்கடலில் உருவாகும் ‘மிதிலி’ புயல்: எப்போது காற்று பலமாக வீசப்போகிறது தெரியுமா?

நாளை மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.

இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.17) புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவின் பரிந்துரையின்படி புயலுக்கு ‘மிதிலி’ எனப் பெயர் சூட்டப்பட இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வங்கக்கடலில் ஏற்கனவே இரண்டு புயல்கள் உருவான நிலையில் மூன்றாம் புயல் உருவாகிறது. இந்த புயலின் போது நாளை காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை காற்றானது மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திற்கு வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button