இந்தியா

இந்தியாவில் தொடர்ச்சியாக ரயில்களை கவிழ்க்க எடுக்கும் முயற்சி

இந்தியாவில் தொடர்ச்சியாக ரயில்களை கவிழ்க்க எடுக்கும் முயற்சிகள்   . சென்னை, பெங்களூர், கேரளா மற்றும் கோவை, சேலம் பகுதிகளை இணைக்கும் முக்கிய ரயில்வே பாதையில் இன்று ஆம்பூர் அருகே சென்னை ரெயிலை கவிழ்க்க மாபெரும் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் ரயில் நிலையம் அருகே வீரவர் கோவில் என்ற இடத்தில் 3.45 மணிக்கு ரயில் வந்தது. அந்த இடத்தில் கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட சிமெண்ட் கல் மற்றும் கருங்கற்களை தண்டவாளத்தில் அடுக்கி வைத்திருந்தனர்.

ரயில் அருகே வந்த போதுதான் என்ஜின் டிரைவர் அதை கவனித்தார். அதனால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை. வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மீது மோதி தூக்கி வீசியது. மேலும் தண்டவாளத்தில் இருந்த சிமெண்டு கற்களை நொறுக்கியபடி ரயில் சென்றது. மற்ற பெட்டிகளில் உள்ள சக்கரங்களும் கற்கள் மீது ஏறி நொறுக்கின. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. 

ரயிலை என்ஜின் டிரைவர் மெதுவாக இயக்கினார். பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் காவேரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார்.

பின்னர் என்ஜின் கல் மீது மோதிய பகுதிகளை பார்வையிட்டார். அதில் சிறிய அளவு சேதம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து 15 நிமிடம் காலதாமதமாக காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு ஜோலார்பேட்டை பொலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான பொலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் தண்டவாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் பொலீசார் நடந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பச்சக்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடிசாவில், 3 ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 292 பேர் உயிரிழந்தனர். 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரயில்வே அதிகாரிகள் உஷார் படுத்தபட்டனர். ரயில் என்ஜின் டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தபட்டனர்.

திருச்சியில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரயில் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் லோரி டயர்களை அடுக்கி வைத்து கவிழ்க்க சதி நடந்தது.

இதில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதேபோல திருப்பத்தூர் ரயில்நிலையத்தில் சிக்னல் பெட்டி கற்கள் வீசி உடைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தினர். இந்த சதி சம்பவங்களில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.தொடர்ந்து விசாரணை நடப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ரயில்களை கவிழ்க்க அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். தண்டவாள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே பொலீசார் தெரிவித்தனர். 

Back to top button