இந்தியா

இந்தியாவில் 291 பேரின் உயிரை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அண்மையில் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகெ பாகாநாகா பஜாரில் கடந்த மாதம் 2ம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன, 291 பேர் பரிதாபமாக பலியாகினர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், தவறான வகையில் சிக்னல் வழங்கப்பட்டதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சமர்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்னல் இணைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் போது நிகழ்ந்த குறைபாடுகளே விபத்திற்கான காரணம். அதாவது பாஹாநகா பஜார் ரயில் நிலையத்தில் இரு இணையான ரயில் பாதைகளின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் சிக்னல் ஸ்விட்ச்களில் அசாதாரண செயல்பாடு இருந்துள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி தெரிவித்திருக்க வேண்டும், ஒருவேளை அவர் சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவினரிடம் தெரிவித்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். இதுதவிர ரயில் பாதை மேற்பார்வையாளர்கள் குழு அளவிலும் தவறு நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button