இந்தியா

ஏன் திருடர்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தருகிறார்: அமைச்சர் ரோஜா சரமாரி கேள்வி

மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினால் என்ன அர்த்தம் என்று அமைச்சரும் நடிகையுமான ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திராவில், கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சில ஆண்டுகளாக இதற்கான விசாரணையை சி.ஐ.டி நடத்தி வந்த நிலையில், சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்பு, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, 14 நாள்கள் சந்திரபாபு நாயுடுவை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவர் கடந்த 10ம் தேதி நள்ளிரவு 1 மணி ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளருமான லோகேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், “சந்திரபாபு நாயுடு தவறு செய்திருக்க மாட்டார். தன்னலமற்ற பொது சேவை அவரை காப்பாற்றும்” என ஆறுதல் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, “நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்தால், அவரது மரியாதை தான் குறையும். மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தான ரஜினி அரசியலுக்கு வரவில்லை. மக்கள் நலனுக்காக சிறை செல்பவருக்கு ஆதரவு தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஆனால், திருடர்களுக்கு ஏன் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்கிறார். சந்திரபாபு நாயுடுவை நல்லவர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். மக்கள் பணத்தை திருடியவர்களுக்கு ஆதரவு சொன்னால் என்ன அர்த்தம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Back to top button