இலங்கை

புத்தள கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு! மகன் – தாய் வைத்தியசாலையில்

புத்தளத்தில் உள்ள கடற்கரையொன்றில் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்றைய தினம் (12-11-2023) காலை மாரவில வடக்கு மூதுகடுவ கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. குறித்த கடற் பிரதேசத்தில் கரைவலை மீன் வாங்கச் சென்ற ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அங்கு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அந்த நபரின் தாயும் வெட்டுக்காயங்களுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் வெட்டுக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோதல் நடந்ததாக கூறப்படும் கடற்கரையில் தோட்டா துப்பாக்கி ஒன்றும், இரண்டு வெற்று தோட்டாக்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் மாரவில தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button