லண்டன்

பிரித்தானிய இளவரசி கேட்டின் அரச குடும்ப வாழ்க்கையை பற்றி கேட்ட மாணவி: வியக்க வைத்த பதில்

பிரித்தானியாவின் இளவரசி கேட்டின் அரச குடும்ப வாழ்க்கையை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசியான கேட் செல்சியா மலர் கண்காட்சிக்கு சென்றிருந்த போது, அங்கு வந்திருந்த பாடசாலை மாணவர்களோடு சுற்றிப் பார்த்துள்ளார்.

இந்நிலையில், மாணவ, மாணவிகளோடு கலந்துரையாடல் நடத்திய கேட், இளவரசர் லூயிஸின் பள்ளி வாழ்க்கையை பற்றி சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இளவரசர் லூயிஸ் தனது பள்ளி தோட்டத்தில் பீன்ஸ் செடிகளை பயிரிட்டார் என்று கூறியுள்ளார். கேட், செல்சியா மலர் கண்காட்சியில் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்களையும் பெண்களையும் சந்தித்தார், பின்னர் அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இதேவேளை, இளவரசி கேட் மாணவிகளுடன் உரையாடி கொண்டிருக்கும் போது, ஒரு மாணவி மட்டும் கேட் அருகில் சென்று உங்களது அரச குடும்ப வாழ்க்கையை பற்றி கூறுங்கள் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கேட் ‘அரச வாழ்க்கையில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்’ என புன்னகையுடன் பதிலளித்துள்ளார். உடனே அங்கிருந்த பாடசாலை மாணவர்கள் கரகோசம் எழுப்பியுள்ளனர்.

மேலும், ஓய்வு பெற்ற முதியவர்களை சந்தித்த கேட் அவர்களோடு எளிமையாக பேசியுள்ளார், அதில் ஒரு முதியவர் பிரித்தானியாவின் வருங்கால ராணியை சந்தித்ததில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என கூறியுள்ளார். முன்னாள் பிரித்தானிய ராணியான எலிசபெத் கூட செல்சியா மலர் கண்காட்சிக்கு அடிக்கடி வருவார் என்றும், இந்த மலர் கண்காட்சி அவர் உயிரிழந்த பின்பு நடத்தப்படும் முதல் கண்காட்சி எனவும் மலர் கண்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Back to top button