இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு வலியுறுத்தும் ஐ.நா; சனல் 4 வெளிப்படுத்திய விடயங்கள்

இலங்கையில் 2019 நடந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் மற்றும் சர்வதேச ஆதரவுடன் சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா கூறியுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நேற்று (06) இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறிவது மட்டும் போதாது என்றும், குற்றவாளிகளை அவர்களின் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க இலங்கையில் போதிய பொறிமுறைகளை அமுல்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பில் நடைமுறையில் உள்ள பொறிமுறைகள் போதுமானதாக இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உண்மை, நீதி மற்றும் தீர்வுகளைத் தேடி இன்னமும் தவித்து வருவதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

Back to top button