இலங்கை

நாட்டில் தொடரும் மோசமான காலநிலையால் பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறையும் வரை சில பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கும் மத்துகம கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலைக்கும் நேற்று (07.09.2023) முதல் விடுமுறை வழங்க பாடசாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, புலத்சிங்கள ஹல்வதுர தமிழ்க் கல்லூரி, பரகொட கித்துலகொட கனிஷ்ட கல்லூரி, மேல் வெல்கம கனிஷ்ட கல்லூரி, மத்துகம பிரதேசத்தின் மொல்காவ தர்மபால மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் மழை ஆரம்பிக்கும் நேற்றைய தினம் (7ஆம் திகதி) வரை வெள்ள நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்ற போதிலும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இல்லை என புலத்சிங்கள பிரதேச செயலாளர் ரங்கன பிரசாத் பெரேரா தெரிவித்தார்.

இன்று (08.09.2023) நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Back to top button